19

இந்தக் கட்டுரை ஒரு நேயர் விருப்பம்.  அன்பர் அகமது சுபைர் அவர்கள் ஒருநாள் கேட்டார், “பறவைகளுக்கு 20 பாகம்… விலங்குகளுக்கு ஒரு பாகம் தானா???  இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் உங்க கிட்டெ… :).” என்று.  ஆகவே பூச்சிகளைப் படம் பிடிப்பது பற்றி எழுதுகிறேன் இங்கு.

பூச்சிகள் உருவத்தில் மிகச் சிறியவை.  ஆகவே அவற்றைப் படம் பிடிக்க சிறிது சிரமப் பட வேண்டும்.  அந்நாட்களில் இப்போது இருப்பது போல ‘மேக்ரோ லென்ஸ்’ கள் கிடையாது.  ஆகவே பூச்சிகளைப் படம் பிடிக்க கேமிராவின் லென்ஸ் பூச்சியில் இருந்து ஒன்றிரண்டு அங்குல தூரத்தில் இருந்தால் தான் பூச்சியின் நுண்ணிய பரிமாணங்கள் தெரியும்.  ஆனால் கேமிராவின் லென்ஸோ ஒரு குறிப்பிட்ட தூரத்திகு மேல் இருந்து எடுத்தால் தான் படம் சரியாகத் தெரியும்.  அப்படி எடுத்தாலோ பூச்சி ஒரு புள்ளியாகத் தெரியும். ஆகவே நிலமையை சமாளித்திட பெல்லோஸ் ஸ்கோப் என்ற ஒரு கருவியின் உதவி தேவை.  துருத்தி போன்ற அக்கருவியில் உங்கள் கேமிராவின் லென்ஸைப் பொறுத்தி, ஒரு அங்குல தூரத்தில் இருந்து கூட படங்கள் பிடித்திடலாம்.

 
 

உங்கள் கேமிராவின் லென்ஸைக் கழற்றி எடுத்து அந்த இடத்தில் பெல்லோஸ் ஸ்கோப்பைப் பொறுத்தி, லென்ஸை அதில் பொறுத்திப் படம் பிடிக்க வேண்டும்.  அப்படிப் பிடித்த மூன்று படங்கள் இதோ:

 
(சிலந்தி முட்டைகளை தானே நூற்ற நூலால் சுற்றி பந்தாகச் செய்து தன்னுடனே சுமந்து செல்கிறது)

இந்த சிலந்தி தோட்டங்களில் தரையில் வாழ்ந்திடும் ஒன்று.  சுமார் 5 மில்லி மீட்டர் அளவில் இருக்கும் இது.  இந்தப் படம் ஒரு அங்குல தூரத்தில் இருந்து எடுக்கப் பட்ட்து.

சிலந்திக்கு மூன்று அல்லது நான்கு ஜோடிக் கண்கள் உண்டு, தூரத்துப் பார்வை, பரந்த பார்வை, கிட்டத்துப் பார்வை, தூரத்தினை அளந்திடும் வகை செய்ய முப்பரிமாணப் பார்வை உள்ள கண்கள் என்று.

 
(அன்று பிறந்த வண்ணாத்திப் பூச்சி)

இடையான் பூச்சிகளில் பல விதங்கள் உண்டு.  புல் வடிவில், இலை வடிவில், சருகு வடிவில், மலர் வடிவில் என்று.  ஆனால் அவை எல்லா வற்றிற்கும் சில பொதுக் குணங்கள் உண்டு.  அவை மாய்மாலம் (சுற்றுப் புறத்தோடு நிறத்தில் ஒன்றிடுதல்), தன்னைவிடப் பெரிய உயிரினங்களையும் பிடித்துத் தின்னல் என்று.  சில வகை இடையான்கள் கணவனோடு இன்பம் அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே கணவனின் தலையைக் கடித்துத் தின்று விடும்!  தலை இழந்து கணவன் துடிக்கும் போது மனைவிக்கு இன்பம் அதிகரிக்கிறது என்று ஒரு பூச்சி ஆராய்ச்சியாளர் சொல்லி இருக்கிறார்!!

 
(முன்னங் கால்களை மடித்து வைத்துக் கொண்டிருக்கும் குச்சி ரக
இடையான் பூச்சி)

இவ்வுலகில் லட்சக் கணக்கான பூச்சிகள் உள்ளன.  அவை ஒவ்வொன்றும் தனித் தன்மை வாய்ந்தவை, அவற்றைப் படம் பிடித்தல் ஒரு அருமையான பொழுது போக்கு.  அப்படிப் படம் பிடிக்கும் போது அவை பற்றி பல விஷயங்களையும் அறிந்திட வாய்ப்பு கிடைக்கும்.

(படங்கள் – நடராஜன் கல்பட்டு)

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

புகைப்பட அனுபவங்கள் Copyright © 2015 by கல்பட்டு நடராஜன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book